நிலக்கரி ஊழல்: இரு மத்திய அமைச்சர்களுக்கு சோனியா விரைவில் 'கல்தா'?
நாடு முழுவதும் விதிகளை மீறி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 5 தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுபோத்காந்த் சகாய், காங்கிரஸ் எம்பிக்கள் நவீன் ஜின்டால், விஜய் தர்தா, முன்னாள் நிலக்கரித்துறை இணையமைச்சர் சந்தோஷ் பகோர்டியா உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். (நேற்று தான் அவர் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்).
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நாடெங்கும் காங்கிரஸ் கட்சி மீது மக்களிடம் அதிருப்தி நிலவி வருவதால், கெட்ட பெயரை துடைக்க சர்ச்சையில் சிக்கியுள்ள 2 காங்கிரஸ் அமைச்சர்களையும் நீக்க சோனியா தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
விரைவிலேயே இருவரையும் ராஜினாமா செய்யுமாறு சோனியா உத்தரவிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.