கூடங்குளம் திட்டத்தை மக்கள் மீது திணிக்க மூர்ககமாக செயல்படும் அரசு: தமிழக ஆயர் பேரவை
நாகர்கோவில்: அதிமுக அரசு தேர்தலுக்கு பின் வேறு மொழி பேசுகிறது என்றும், கூடங்குளம் திட்டத்தை மக்கள் மீது திணிக்க அரசு மூர்க்கமாக செயல்படுகிறது என்றும் தமிழக ஆயர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் பேராயர் சின்னப்பா, துணை தலைவர் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த அச்சத்தால் சாதாரண மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். 390 நாட்களுக்கு மேலாக அமைதியாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 144 தடை உத்தரவு என்ற பெயரில் மக்களை கலைந்து செல்ல போலீசார் வற்புறுத்தி அவர்கள் மீது தடியடி பிரயோகம், கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் அந்தோணி என்பவர் உயிரிழந்துள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை, எந்தவித வன்முறையும் இல்லாத இடத்தில் திட்டமிட்டு போலீசாரே வன்முறையை தூண்டிவிட்டு இப்போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கின்றனர். இந்நிலையில் இடிந்தகரை லூர்து மாதா ஆலயத்தில் குழுமியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி,
அங்குள்ள லூர்து மாதாவின் சொரூபத்தை போலீசார் சேதப்படுத்தியுள்ளனர். இது அத்துமீறிய செயலாகும். கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகும். இச்செயல் அனைத்தையும் தமிழக ஆயர் பேரவை கண்டிக்கிறது.
ஜாதி, மதம், கட்சி பேதம் கடந்து எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராடும்போது திட்டமிட்டு சிலர் இப்போராட்டத்திற்கு மதச்சாயம் பூச முயல்கின்றனர். மக்களின் போராட்டம் தன்னெழுச்சியானது எந்த போராட்டமும் பிறர் தூண்டுதலால் நீண்ட நாட்களுக்கு நிலை நிற்காது. மக்களை நேரடியாக சந்தித்தால் மட்டுமே இவ்வுண்மை புலப்படும். அரசு உண்மையை ஏற்கும் அக்கறையில்லாமல் திட்டத்தை மக்கள் மீது திணிக்க மூர்க்கமாக செயல்படுகிறது.
மாநில அரசு தேர்தலுக்கு பின் வேறு மொழி பேசுகிறது. போலீசாரின் அராஜகத்தால் குழந்தைகளும், பெண்களும் அங்கும் இங்கும் ஓடுவது நெஞ்சை பிழிவதாய் உள்ளது. போர்க்களம் போல் அப்பகுதி காட்சியளிக்கிறது. எனவே மாநில முதல்வர் இப்பிரச்னையில் தயக்கம் காட்டாமல் மக்களின் உணர்வுக்கும், அச்சத்திற்கும் மதிப்பளித்து, அவர்களோடு கலந்துரையாடி அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிடவும், அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications