கிரானைட் மோசடி: பெண் தாசில்தார் உட்பட 7 பேர் வீடுகளில் திடீர் சோதனை- முக்கிய ஆவணஙகள் பறிமுதல்
மதுரை: கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த மேலூர் பெண் தாசில்தார் உட்பட 7 பேர் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனையடுத்து பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் அதிபர் பி.ஆர்.பி. உட்பட கிரானைட் அதிபர்கள், குவாரி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜி.ஜி. கிரானைட் அதிபர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த மேலூர் தாசில்தார் ருக்மணியின் வீட்டில் (மேலூர் தெற்கு தெரு) நேற்று மாலை மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய பிரிவில் எழுத்தாளராக உள்ள ஞானசேகர், பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரியும் மேலூர் வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த அய்யனார், திருவாதவூர் மனோகரன், வேப்படைப்பு அம்பேத்கர் மற்றும் சுண்ணாம்பூரை சேர்ந்த சுந்தரம், மதுரையைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களின் பத்திர நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications