மதுரை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியர் சாந்தியை கொலை செய்ய முயற்சி

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் சாந்தி, பேரையூர் வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் அணைக்கரைப்பட்டி என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் இடத்தை ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வை முடித்துவிட்டு அவர்கள் பேரையூர் திரும்பியபோது வாழைத்தோப்பு என்ற இடத்தில் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் எதிரே வந்தது.
அப்போது அந்த டிராக்டரை நிறுத்துமாறு சாந்தி சைகை செய்துள்ளார். இதை கவனித்த டிரைவர் வண்டியை நிறுத்தாமல் சாந்தி மீது டிராக்டரை மோத முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த இடத்தில் இருந்து அந்த டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர். ஆனால் அதிகாரிகள் வந்த வாகனம் கடும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டிராக்டரை மோதிய அந்த நபரின் பெயர் பாக்யராஜ் என்றும், டிராக்டர் உரிமையாளர் லூர்து கிங் என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கரூரில் ஆர்.டி.ஓ.வாக நேர்மையாக சாந்தி செயல்பட்ட காரணத்தினால் தான் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரால் உசிலம்பட்டிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications