'ஹாலிடே' முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்!
முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்கு அவ்வப்போது போய் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஓய்வுக்காக அவர் கொடநாடு செல்கிறார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் பணிப் பளுவின்போது சில சமயங்களில் மாமல்லபுரம் மற்றும் பெங்களூருக்குப் போய் வருவார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓய்வுக்காக அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் அவர் தென் கொரியாவுக்கு குடும்பத்தோடு புறப்பட்டுப் போனார். அங்கு ஒரு வார கால ஓய்வு மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அரசு முன்வரவேண்டும். அங்கு எரிபொருள் நிரப்புவதற்கு முன்பு கூடங்குளம் மக்களின் அச்ச உணர்வை போக்க வேண்டும். அதை விடுத்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவியதை ஏற்க முடியாது.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் சர்வதேச அளவில் கச்சா எண்ணை உயர்வதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது என்று காரணம் சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் சிமெண்ட் விலை குறைந்து வரும்போது இந்தியாவில் மட்டும் சிமெண்ட் விலை குறையாமல் அதிகமாவது ஏன்? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை ஏற்க முடியாது. இதனால் இந்திய வியாபாரிகளும், மக்களும் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துதான் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.