டெக்கான் சார்ஜர்ஸ் தடை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தடை: மும்பை உயர்நீதிமன்றம்

ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த அணிகளுள் ஒன்று டெக்கான் சார்ஜர்ஸ். கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த 5வது ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பங்கேற்றது. ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த அணி நிர்வாகம், ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் திணறியது.
இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. இதில் கலந்து கொண்ட நிறுவனம் கேட்ட ரூ.900 கோடியும், நிபந்தனையும் ஒத்துவராததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கு சம்பளம் அளிக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த காலகெடு முடிவடைந்த நிலையில், ஐபிஎல் ஆட்சிமன்ற குழு சென்னையில் அவசர கூட்டத்தை கூட்டியது. அதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் குழுவின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியம், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது சட்டத்துக்கு விரோதமானது. எனவே அணி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதி காதவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அகமதாபாத், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்ட அணிகளை உருவாக்க டெண்டர் வெளியிட முடிவு செய்துள்ளோம். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக புதிய டெண்டர் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். தற்போதைக்கு இதே நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications