கச்சா எண்ணெய் விலையில் சரிவு: பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு?
மும்பை: சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து, மத்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 116 அமெரிக்க டாலர் என்ற விலையில் வாங்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஒரு பேரல் 106.74 டாலருக்கு வாங்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலையில் சரிவை தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து மத்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
பொதுவாக கச்சா விலையில் 1 டாலர் குறைந்தால், பெட்ரோல் விலையில் 33 பைசா குறையும். அதேபோல சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு உயரும் போது, பெட்ரோல் விலையில் 77 பைசா குறையும்.
இது குறித்து பி.பி.சி.எல் இயக்குனர்(நிதி) எஸ்.வரதராஜன் கூறியதாவது,
தற்போது பெட்ரோல் லாபமோ, நஷ்டமோ இல்லாத நிலையில் விற்கப்படுகிறது. தற்போதைய கச்சா விலையின் சரிவை தொடர்ந்து பெட்ரோல் விலை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றார்.
முன்னதாக மாதந்தோறும் இருமுறை பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் முறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வந்தன. இதன்படி மாதந்தோறும் 1ம் தேதி மற்றும் 16ம் தேதி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதத்துடன் இந்த முறை கைவிடப்பட்டது.
இது குறித்து பி.பி.சி.எல் தலைவர் ஆர்.கே.சிங் கூறியதாவது,
அமெரிக்காவில் பெட்ரோல் விலை தினமும் மாலை 3 மணிக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மற்ற சில நாடுகளில் ஒரிரு மணி நேரங்களுக்கு இடையே கூட பெட்ரோல் விலை மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் 2 வாரங்களுக்கு ஒருமுறை அல்லது வாரந்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் பெட்ரோல் விலை ஏற்றத்தாழ்வு, நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தது என்றார்.