ரமணனுக்கேத் தெரியாமல் வந்த மழை... படாதபாடு பட்டுப் போன சென்னை மக்கள்!

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் எப்போதுமே மழை வருவதை மிகத் துல்லியமாக கணித்துக் கூறியதே இல்லை. பொத்தாம் பொதுவாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை வரலாம் என்று மட்டுமே கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரத்தில் சொன்னபடி மழை வருவதில்லை. சில சமயங்களில் அடை மழை அல்லது பேய் மழை வெளுத்துக் கட்டும். ஆனால் மழை வரலாம் என்று கூட கூறியிருக்க மாட்டார்கள். இப்படி அவர்கள் சொல்வதற்கு நேர் மாறாகவே எல்லாம் நடந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஒரு மழை வரும் என்பதைக் கூடவா கணித்துக் கூற முடியாது என்று மக்கள் கடுப்புடன் கேட்கின்றனர்.
நேற்று கூட சென்னையில் பிற்பகலுக்கு மேல் திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்து பேய் மழையைக் கொண்டு வந்து சேர்த்தது. மிகப் பெரிய அளவில் சூறாவளிக் காற்றும் வீசியதால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. மேலும் இப்படி ஒரு பேய் மழையும், பயங்கர காற்றும் வீசுவதால் என்னவோ ஏதோ என்று மக்கள் பெரும் பீதியடைந்து விட்டனர். மின்சாரம் வேறு போய் விட்டதால் பலருக்கு நகரில் நடப்பது என்னவென்றே தெரியவில்லை.
இத்தனைக்கும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சொட்டு மழை கூட விழவில்லை. லேசான காற்று மட்டுமே இருந்தது. இதனால் புறநகர்ப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நகருக்குள் நடந்த இந்த களேபரம் குறித்து ஒன்றுமே தெரியவில்லை, சில மணி நேரங்களுக்கு.
நேற்று பெய்த மழையையும் வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்கத் தவறி விட்டது. வழக்கம் போல வெப்பச் சலனம், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கலாம் என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொல்லியுள்ளனர் ஒரு விளக்கத்தை. ஆனால் அவர்கள் சொன்ன சில நிமிடங்களிலேயே வந்த மழையும் கூட போய் விட்டது என்பதுதான் பெரிய வேடிக்கை.
நேற்று பெய்த திடீர் மழை மற்றும் சூறாவளிக் காற்றால் சென்னை நகரமே புயலால் பாதிக்கப்பட்ட நகரம் போல மாறி விட்டது. மரங்கள் பல இடங்களில் வேரோடு பெயர்ந்து விழுந்தன. சாலைகளில் வெள்ளம் போல நீர் ஓடி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டது. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி விட்டனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனுக்கேத் தெரியாமல் இந்த மழை வந்து விட்டது போல. அடுத்த முறையாவது கரெக்டாக கணித்துக் கூறுங்க சார்...!












Click it and Unblock the Notifications