30ம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு: வினாத்தாள் அவுட்டாகாமல் இருக்க தீவிர நடிவடிக்கை
நெல்லை: தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடக்கிறது. குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியானதால் வி.ஏ.ஓ. தேர்வை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முழுவதும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 1,870 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விற்காக 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30ம் தேதி இதற்கான தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கு ஹால் டிக்கெட் கடந்த வாரமே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் கருவூலத்திற்கு வெள்ளிக்கிழமைக்குள் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நாளான்று காலை வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல தாசில்தார்கள், பி.டி.ஓ.க்கள் தலைமையிலான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தாலுகாவிலும் அருகருகே உள்ள 10 மையங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications