கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்கக்கோரி 3ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்படும் நிலையில் சிலர் வேண்டும் என்றே தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த செயல் கண்டிக்கதக்கது. தமிழகத்தில் சுமார் 3000 மெகா வாட்டுக்கு மேல் மின் பற்றாக்குறை உள்ள இந்த காலக் கட்டத்தில் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதை மத்திய அரசும் பரிசீலனை செய்து வருகின்றது. மேலும் மத்திய அரசின் நிபுணர் குழு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று உறுதிபட கூறியுள்ளனர்.
ஆனால் சிலர் வேண்டும் என்றே வேறு நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பாவி மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
எனவே, கூடங்குளத்தின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து உணர்த்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்டோபர் 3ம் தேதி அன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications