நல்லா 'கோவாப்ரேட்' பண்ணுகிறது தமிழக அரசு... நாராயணசாமி திடீர் பாராட்டு

டெல்லியிலிருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து பேட்டி அளிக்கும் நாராயணசாமி இன்றும் வழக்கம் போல சென்னைக்கு வந்தார்.அப்போது விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் கூடங்குளம் விவகாரம் குறித்து நாராயணசாமி பேசுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்று உச்சநீதிமன்றம் ஒருபோதும் சொல்லவில்லை. இதுகுறித்து ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டு விட்டனர். அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து சில கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இதற்கு அணுமின் கழகமும், மத்திய அரசும் வருகிற 4ம் தேதி சில விளக்கங்களை அளிக்கும்.
அணுமின் நிலையம் முழு அளவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பது பற்றிய முழு ஆவணங்களோடு உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடலில் இறங்கி சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில சிறிய அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பாக போராட்டம் நடத்துவது தேவையற்றது.
இந்த பிரச்சனையை பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. போராட்டங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சிறந்த முறையில் பாதுகாப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த வகையில் மத்திய அரசுக்கு முழு அளவில் மாநில அரசு ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
மாநில அரசு கேட்டதற்கிணங்க கப்பல் படை பாதுகாப்பும் அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவையும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக மாநில அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் கிடைக்காமல் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இரு மாநிலங்களும் பெருமளவு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இந்த பிரச்சனையை பொறுத்தவரை கர்நாடக அரசின் போக்கை மத்திய அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என பிஜேபி கூறுவது கேலிக்குரியதாகும் என்றார்.
சரி கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விடாவிட்டால் அந்த மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் விதி 356ஐ பயன்படுத்தி எந்த மாநில அரசுகளையும் கலைக்கக்கூடாது என்ற பல்வேறு அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காது என்றார் நாராயணசாமி.
சமீபத்தில்தான் சென்னைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியை நாராயணசாமி சந்தித்து, பிரதமர் 2 கேபினட் அமைச்சர் பதவியைத் தருவதாக கூறியுள்ளார், பேரைச் சொல்லுங்க என்று கேட்டார் நாராயணசாமி. ஆனால் திமுக அக்கோரிக்கையை நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தமிழக அரசை திடீரென வெகுவாகப் புகழ்ந்து நாராயணசாமி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications