அமெரிக்காவில் 5ல் ஒரு இளைஞருக்கு காது செவிடு: புது சர்வே

காதுகளில் எப்போது பார்த்தாலும் இயர்போனை மாட்டியபடி திரியும் இளைஞர்கள். ஐபாட், எம்பி3 கருவிகளை 24 மணிநேரமும் காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் பாடல்கள் கேட்பது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த சாதனங்கள் தற்போது இளைஞர்களின் காதுகளை பதம் பார்த்துவிட்டன.
அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது செவிடாகி விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களின் வருகைக்கு பிறகுதான். பாடல்களைக் கேட்கப் பயன்பட்டு வந்த இந்த சாதனங்களால் செவித்திறன் பாதிக்கப்படுவதாக இதுவரை ஆய்வுகள் கூறவில்லை.வெறும் சந்தேகம் மட்டும் கிளப்பின. இப்போது நடந்திருப்பது விரிவான நீண்டகால ஆய்வு.
ஒலி அளவு 85 டெசிபலுக்கு மேல் போனால் செவித்திறன் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இயர்ஃபோன் மூலம் காதுக்குள் செல்லும் ஒலிதான் என்றில்லை; ஆரன் அடிப்பது, கட்டிடம் இடிப்பது, சுவரில் துளை போடுவது, தெருநாய் குரைப்பது என்று பல வழிகளில் காது பாதிக்கலாம். என்றாலும் இன்றைய இளைஞர்கள் மெல்லிசை கேட்பதில்லை.
ராக், பாப், ஜாஸ் என்று உச்சத்தில் ஒலிக்கும் இசை. இதனால் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு நிரந்தரமானது என்பது இவர்களுக்கும் தெரியாது, இவற்றை வாங்கித்தரும் பெற்றோரும் உணர்வதில்லை.
கணக்கில்லாத பாடல்களை பதிவு செய்து கேட்கக்கூடிய எம்பி3 சாதனங்களில், ஒலியின் அளவை அறியும் வசதியை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தருவதில்லை. எனவே அரை மணிக்கு ஒரு சிறிய இடைவெளி விட்டு காதுக்கு ஓய்வு கொடுக்கலாம். மிகவும் குறைந்த அளவில் ஒலியை வைத்து பாடலைக் கேட்கலாம். இன்றைக்கு அமெரிக்காவில் 5ல் 1 இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலும் செல்போனில் பாடலை பதிவு செய்து வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கியுள்ளனர் இன்றைய இளைஞர்கள். இன்றைக்கு காது மூக்கு தொண்டை நிபுணரிடம் வரும் நோயாளிகள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. செவித்திறனை முற்றிலும் இழக்கும் முன் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பாதுகாக்கவேண்டும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications