குடும்பத்தோடு தலைமறைவான துக்கையாண்டி, மகளுக்கு முன் ஜாமீன் - மனைவிக்கு மறுப்பு!
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ஏடிஜிபி துக்கையாண்டி, மகளுக்கு முன் ஜாமீன் -மனைவி வழங்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: நில அபகரிப்பு மோசடி புகாரில் சிக்கிய ஏடிஜிபி துக்கையாண்டி மற்றும் அவரது மகள் யாமினி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா மற்றும் சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள் மீதான புகார்கள்.
இந்த வழக்கினால் ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் திடீரென துக்கையாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துக்கையாண்டி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இந்த வழக்கில் பிடிபடாமல் இருக்க தலைமறைவாயினர். இவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டிருந்தன.
இதனிடையே மூவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் துக்கையாண்டி, மகள் யாமினி ஆகியோருக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனால் சுப்புலட்சுமி சரணடைய வேண்டும் அல்லது போலீசாரால் பிடிக்கப்படும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications