தமிழக பா.ஜ.க தலைவர் தேர்தல்: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை : தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தெடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்
மாநில பாஜக தலைவராக தற்போது பொன். ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கிறது.
பா.ஜனதா மாநில தலைவர் பதவி 3 ஆண்டுகள் ஆகும். சமீபத்தில் நடந்த பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 2-வது முறையும் பதவி வகிப்பதற்கு தடையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில தலைவர் ஆகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் மதுரையில் பாஜகவின் மாநில மாநாட்டினை சிறப்பாக நடத்தி கட்சி தலைமையின் குட்புக்கில் பொன். ராதாகிருஷ்ணன் இடம் பெற்றுள்ளார். அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை
தற்போது பாஜகவின் உட்கட்சி தேர்தல் தொடங்கி உள்ளது. கிளை தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். வருகிற 13-ந்தேதி திருப்பூரில் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்தல் பற்றி ஆலோசனை நடைபெறும்.
தற்போது ஆன்-லைன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை அனைத்து மாவட்டங்களுடனும் கம்ப்யூட்டர் தொடர்பை உருவாக்குவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications