கேரளாவில் இரவில் விபத்துகளை குறைக்க டிரைவர்களுக்கு இலவச சுக்கு காபி திட்டம் அறிமுகம்
திருவனந்தபுரம்: இரவில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவசமாக சுக்கு காப்பி கொடுக்கும் திட்டத்தை கேரள போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து துவக்கி உள்ளனர்.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 35,216 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,145 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்துகள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதையடுத்து டிரைவர்களின் தூக்கத்தை கலைத்து விபத்துகளை குறைக்க கேரளாவில் போலீசாரும், பொதுமக்களும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன்படி இரவில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு இலவச சுக்கு காப்பி கொடுத்து வருகின்றனர்.
முதன் முதலாக இந்த திட்டம் கொல்லம் மாவட்டத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர்களுக்கு, போலீசார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இலவசமாக சுக்கு காப்பி வழங்கி வருகின்றனர்.
திருவனந்தபுரம் வெஞ்சுரமூடு பகுதி போலீசாரும், இப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களும் சேர்ந்து சுக்கு காப்பி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். பல்வேறு ஆயுர்வேத மருந்துகளும், கருப்பட்டியும் சேர்ந்து தயாரிக்கப்பட்ட இந்த சுக்கு காப்பிக்கு டிரைவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரவில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க போலீசார் மற்றும் பொதுமக்களின் இந்த முயற்சிக்கு டிரைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications