தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு-மின்தடை நேரம் அதிகரிப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது. பல மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே சராசரியாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அளவு பதிவாகி வருகிறது.
நெல்லையில் நேற்று 105.8 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. நண்பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதே நேரத்தில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காற்று பரவலாக வீசியதால் காற்றாலைகள் மூலம் ஓரளவு மின்சாரம் உற்பத்தியானது. இதனால் இரவு நேர மின்வெட்டு குறைந்தது. இந்த நிலையில் தற்போது வெயில் அதிகரித்து காற்றும் வீசும் வேகமும் குறைந்ததுள்ளது. இதனால் மின்தடை நேரம் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக காற்றாலை மின்உற்பத்தியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்தடை நேரம் மேலும் அதிகரித்துள்ளதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடை கணக்கிட்டால் நேற்று மொத்தம் சுமார் 10 மணிநேரம் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பகலில் மட்டுமின்றி இரவிலும் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். காற்றின் வேகம் குறைந்ததால் தற்போது தினமும் 14 மணி நேரம் மின் விநியோகம் செய்ய முடியாத நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நெல்லை மற்றும் ஈரோடு காற்றாலை மண்டலங்களில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் கூட பெற முடியவில்லை. அதிகாலை மற்றும் காலை வேளைகளில் வீசும் குறைந்த அளவு காற்றின் மூலம் கிடைக்கும் சொற்ப அளவு மின்சாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications