தமிழகத்தின் நீர்த் தேவையை உணர்ந்துள்ளோம்- மத்திய குழு
திருவாரூர்: காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் பெரும் நீர்த் தேவையில் உள்ளனர். இதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று டெல்லியிலிருந்து வந்துள்ள நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மனோகரன் கூறியுள்ளார்.
காவிரியில் கர்நாடக அரசு உரிய நீரைத் திறந்து விடுவதில் பெரும் குழப்பம் செய்து வருவதாலும், போராட்டங்கள் அங்கு வெடித்துள்ளதாலும் நிலைமையை நேரில் ஆராய டெல்லியிலிருந்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் டிவி.சிங் தலைமையில் ஒரு குழு தமிழகம் வந்துள்ளது.
இந்தக் குழுவினர் அணைகளின் நீர் இருப்பு, நீர் வெளியேறும் அளவு, தேவைப்படும் நீரின் அளவு, பயிர்களின் நிலை உள்ளிடடவை குறித்து இக்குழு ஆராய்கிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு நிபுணர் மனோகரன் கூறுகையில், காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகும் தருவாயில் உள்ளதால் நீர் தேவையை உணர்ந்துள்ளோம். 2 நாளில் ஆய்வு குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 11ம் தேதி மத்திய காவரி ஆணையக் குழு கூடவுள்ளது. அதற்குள் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.