தவெக அமைச்சரவை முதல் லிஸ்ட்டில் மிஸ்சான காங்கிரஸ்! சூட்டோடு சூடாக செல்வப் பெருந்தகை விளக்கம்
சென்னை: இன்று பதவியேற்ற தவெக அரசில் முதல் கட்டமாக 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் காங்கிரஸ் சார்பில் இதில் யாரும் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் இது குறித்து செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், சிவகாசி எம்.எல்.ஏ கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சரவையில் காங்கிரஸ் எப்போது?
முதல் கட்ட அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் யாரும் இடம்பெறவில்லை. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கூறியதாவது:- முதல் பட்டியலில் வரவில்லை. இரண்டாவது பட்டியலில் அரசின் ஒரு அங்கமாக இருப்போம். அதை நடைமுறைப் படுத்த தொடர்ந்து வலியுறுத்துவோம். என்று கூறியுள்ளார்.
திமுகவிடம் சொல்லாமல் வந்தீர்களா?
மேலும் அவர் கூறுகையில், "இன்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தவெகவுடனான கூட்டணி உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் எல்லாவற்றிலும் தொடரும் என்று ஏற்கனவே கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். அமைச்சரவையில் எந்த துறை என்பது எங்களின் உயர் மட்ட குழு முடிவு செய்யும்" என்றார்.
திமுகவுடன் 10 ஆண்டுகளுகும் மேலாக கூட்டணி வைத்த காங்கிரஸ், கூட்டணியை திடீரென முறித்துக்கொண்டதாகவும் தங்களிடம் கலந்து கூட ஆலோசிக்கவில்லை என்று திமுக தரப்பு குற்றம் சாட்டி வருவது பற்றி செல்வப் பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செல்வப் பெருந்தகை, "மல்லிகார்ஜுன கார்கே, டிஆர் பாலுவிடம் பேசினார். ராகுல் காந்தி, கனிமொழியிடம் பேசியுள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?
அவர்களிடம் பேசி நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.. சொல்லாமல் போகவில்லை. சொல்லிவிட்டுதான் வந்தோம். திமுக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து இருப்பதாக கேட்கிறீர்கள். அது அவர்கள் விருப்பம். எங்கள் கட்சியின் விருப்பம்" என்றார். பெண்களுக்கு தங்கம் உள்ளிட்ட விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த செல்வ பெருந்தகை, இன்று தெளிவாக முதல்வர் கூறியிருக்கிறார். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார்.














Click it and Unblock the Notifications