அவதூறு வழக்கு.. கோர்ட்டில் ஆஜரானார் ராமதாஸ்.. ஜெ.வுக்கு சவால்!
சென்னை: தனது ஆட்சியில் ஒருவர் கூட லஞ்சம் வாங்கவில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் ஜெயலலிதா தயாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
தமிழக அரசு டாக்டர் ராமதாஸ் மீது சென்னை கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராமதாஸ் நேரில் ஆஜரானார். அதன் பின்னர் வழக்கு டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு ஊழல் செய்கிறது. இதனை நேற்றும் சொன்னோம். இன்றும் சொல்கிறோம். நாளையும் சொல்வோம். ஊழல் செய்யவில்லை என்றால் தமிழக முதல்வர், தங்கள் ஆட்சியில் யாரும் லஞ்சமே வாங்கவில்லை என்பதை நிரூபிக்கட்டும்.
தமிழக முதல்வரால், என் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழுத்து சுதந்திரமோ, அரசியல் பேச்சு சுதந்திரமோ இல்லை என்பது என்னுடைய கருத்து. தமிழக முதல்வர் கொடநாட்டில் தங்கியிருந்தாக நான் குற்றம் சாட்டினேன். ஞாயிற்றுக்கிழமைக் கூட அரசு செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அப்படி யாரும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படவில்லை. மலையில் பங்களாவில் ஓய்வு எடுத்தார் என்று சொன்னேன்.
தமிழக அரசில் ஊழல் நிலவுவதாக கூறினேன். இதை உறுதி செய்யும் விதத்தில் முதல்வரே கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு கவுன்சிலரையும் தனித் தனியாக பெயர் பெயர் சொல்லி அழைத்து கண்டித்திருக்கிறார். எனவே இது ஊழல் நிறைந்த அரசுதான்.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் அரசை விமர்சனம் செய்கிறோம். தேர்தலில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார்கள் என்று நான் சொன்னேன் என்றார் ராமதாஸ்.
நீங்களும் முதல்வர் ஜெயலலிதா போல வழக்கில் வாய்தா வாங்குவீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, நான் நீதிமன்றத்தை மதிக்கிறவன். என்னுடைய வழக்கில் ஆயிரம் கேள்வி, இரண்டாயிரம் கேள்வி என கிடையாது. எனவே தைரியமாக வழக்கை சந்திப்பேன் என்றார் ராமதாஸ்.
கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும்:
இந் நிலையில் ராமதாஸ் அறிக்கையில்,
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 4ம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 65 டி.எம்.சி, கால்வாய் அமைப்புகளில் 60 டி.எம்.சி. என மொத்தம் 125 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது கர்நாடகத்தின் தேவையைவிட அதிகமாகும்.
அதே நேரத்தில் மேட்டூர் அணையில் வெறும் 34 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த இரு வாரங்களுக்குகூட போதுமானதல்ல.
ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் அங்குள்ள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களை தமிழகத்திற்கு எதிராக போராட வைத்துள்ளனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை பிரதமரும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கிருஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடக அரசு மூடியிருப்பது பிரதமரையும், உச்சநீதிமன்றத்தையும் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.
இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
அணைகளின் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு இதுவரை மொத்தம் 3 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ அதன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications