நீரை நிறுத்திய கர்நாடகம்.. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 'தடாலடியாகக்' குறைந்தது

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகாவில் உள்ள கபினி அணைகளில் இருந்து கடந்த 29ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 4,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இந் நிலையில், நேற்று மாலை திடீரென்று கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. நீர்ப்பாசன துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் சென்ற 5 மதகுகள் மூடப்பட்டதாக தலைமை செயற்பொறியாளர் விஜயகுமார் கூறினார்.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வினாடிக்கு 10,940 கன அடியாக இருந்த நீர்வரத்து பகல் 12 மணியளவில் 26,313 கன அடியாகவும், பிற்பகல் 4 மணியளவில் 29,926 கன அடியாகவும் அதிகரித்தது.
இந் நிலையில், நேற்று படிப்படியாக நீர்வரத்து குறைந்தது. காலை 8 மணியளவில் 27,379 கன அடியாக குறைந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் மேலும் குறைந்து 16,265 கன அடியாக இருந்தது.
அதே நேரத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக திங்கள்கிழமை காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்:
இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகத்தின் மறு ஆய்வு மனு மீது, காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால், காவிரி ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு மீது முடிவு எடுக்கும்படி பிரதமரிடம் இன்று நேரில் வலியுறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications