மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது
மாலத்தீவு ஜனநாயக கட்சியின் நிறுவனர் முகமது நஷீத். கடந்த 2008-ம் ஆண்டில் மாலத்தீவில் நடந்த முதலாவது ஜனநாயக ரீதியான தேர்தல்களில் முகம்மது நஷீத் வெற்றிபெற்றிருந்தார்.
தன்னை கண்டித்து கேலி சித்திரம் வரைந்த நபரை, ஜாமினில் விடுவித்த நீதிபதியை கைது செய்ய இவர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சியினர், நாடு தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேடியோ நிலையங்கள் கைப்பற்றப்பட்டன.
தனக்கு எதிராக புரட்சி உருவாவதாக கூறிய நஷீத், கடந்த பிப்ரவரியில் அதிபர் பதவியிலிருந்து விலகிய அவர், தான் பலவந்தமாக பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து நீதிபதியை, கைது செய்ய உத்தரவிட்ட குற்றத்துக்காக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதற்காக இரண்டு முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
தன்மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நீதியான விசாரணை நடக்காது என்றும் கூறியபடி அவர் கடந்த வாரம் படகொன்றின்மூலம் தலைநகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தார். இந்த நிலையில், ஹல்ஹுமாலி தீவின், மாஜிஸ்திரேட், நஷீத்தை கைது செய்ய ஞாயிறன்று உத்தரவிட்டார். இதையடுத்து, நஷீத் தலைநகர் மலேயில் இருந்து தெற்குப் பகுதியில் 440 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தீவில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து படகு மூலம் அவரை போலீசார் மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர்.
நஷீத் கைது செய்யப்பட்டதற்கு, அவரது ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நஷீத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். அது மட்டுமல்லாது, அவர் நிரந்தரமாக, தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.