"ராகுல் இது உங்களுக்கு ஒரு வார்னிங்!" கேரளாவிலிருந்து வந்த எச்சரிக்கை.. பதறும் கதர்கள்! என்ன மேட்டர்
திருவனந்தபுரம்: கேரளச் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றும், காங்கிரஸுக்கு அங்குக் குழப்பம் தீரவில்லை. 'யார் முதல்வர்?' என்ற கேள்விக்குக் கடந்த 10 நாட்களாக விடை தெரியாமல் காங்கிரஸ் தவித்து வருவது, அண்டை மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால் அங்கு மாநிலத்தில் பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு போலவே கடந்த 4ம் தேதி கேரளா உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் கேரளாவில் மட்டுமே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. மற்ற 4 மாநிலங்களிலும் ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், இதுவரை காங்கிரஸில் மட்டுமே முதல்வர் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது.

சிக்கல்
அதிலும் குறிப்பாக காந்திகளின் கோட்டையாகக் கருதப்பட்ட வயநாட்டிலேயே ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு எதிராகப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது காங்கிரஸ் மேலிடத்திற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்தும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் தடுமாறுவது, கேரள மக்களிடையே ஒருவித சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழுபறியால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான வயநாட்டிலேயே அவருக்கு எதிராகப் போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
எச்சரிக்கை போஸ்டர்
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மொத்தம் 3 போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. முதல் போஸ்டரில், "ராகுல், பிரியங்கா... வயநாட்டை மறந்துவிடுங்கள், இனி இங்கே உங்களால் ஜெயிக்க முடியாது" என எச்சரிக்கப்பட்டுள்ளது.. இன்னொரு போஸ்டரில், "கே.சி (வேணுகோபால்) உங்கள் பையை சுமப்பவராக இருக்கலாம், ஆனால் கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்" என விமர்சித்துள்ளனர்.
இன்னொரு போஸ்டரில், "2019ல் அமேதியில் தோற்றது போல, வயநாடும் அடுத்த அமேதியாக மாறும்" என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். காந்தி குடும்பத்தின் மீதான அதிருப்தி கேரளாவிலும் அதிகரித்து வருவதையே இந்த போஸ்டர்கள் காட்டுகிறது.
3 கோஷ்டிகள்
கேரளக் காங்கிரஸ் இப்போது மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ரேஸில் மூன்று பேர் இருக்கிறார்கள். அதில் கே.சி. வேணுகோபால் டெல்லி தலைமைக்கு நெருக்கமான நபராக இருக்கிறார். காந்தி குடும்பத்திற்கு விசுவாசி. கடைசி நேரத்தில் சி.எம் ரேஸில் குதித்தாலும், மேலிடத்தின் ஆசி இவருக்கு இருப்பதால் பல எம்.எல்.ஏ-க்கள் இவரது பக்கமே சாய்ந்துள்ளனர். இருப்பினும், நிர்வாகிகள் மற்றும் மக்களில் பலர் இவரை ஏற்கவில்லை. தேர்தலில் கூட போட்டியிட கேசி வேணுகோபாலை ஏற்கக்கூடாது என்பதே இவர்கள் வாதமாக உள்ளது.
அடுத்து வி.டி. சதீசன் & ரமேஷ் சென்னிதலா.. இவர்கள் இருவரும் தான் இந்தத் தேர்தல் வெற்றிக்காகக் களத்தில் நின்று உழைத்த தலைவர்கள்.. ஆனால், டெல்லி தலைமை இவர்கள் நியமிக்க யோசிக்கிறார்கள். அதுவே இவர்களின் பலவீனமாக இருக்கிறது.. ஆனால், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவு சதீசனுக்கே அதிகமாக இருக்கிறது. அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நிர்வாகிகள் ஆதரவு சதீசன பக்கமும்... டெல்லி தலைமை ஆதரவு கேசி வேணுகோபால் பக்கமும் பிரிந்து கிடக்கிறது. இதுவே அங்குச் சிக்கல் தொடர காரணமாகும்.
பொறுமை இழந்துவிட்டது
இந்தத் தாமதத்தால் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் இப்போது பொறுமை இழந்துவிட்டது. "இந்த இழுபறி பொதுமக்களிடையே தவறான செய்தியைக் கொண்டு செல்லும், உடனடியாக ஒரு முடிவை எடுங்கள்" என அவர்கள் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட எல்.டி.எஃப் மற்றும் பாஜக, "மெஜாரிட்டி கிடைத்தும் ஆளுமை இல்லாத கட்சி காங்கிரஸ்" என விளாசி வருகின்றன. இதற்கு டெல்லி காங்கிரஸின் மவுனமே வழக்கம் போலப் பதிலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications