ஈமு கோழி மோசடி: கோபியை சேர்ந்த பெண் போலீஸ் கணவருடன் கைது
ஈரோடு: ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து கேரளாவில் தலைமறைவாக இருந்த பெண் போலீஸ், அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார். அதேபோல சேலத்தில் பேபி ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி மோசடி செய்த நிறுவன உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் சங்கர்(35). இவர் நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி(34), பெண் போலீஸாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கோபியை அடுத்த சிறுவலூர் காவல் நிலையத்தில் காயத்ரி பணியாற்றி வந்தார்.
இருவரும் சேர்ந்து கடந்த 2000ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தை துவங்கினர். இந்த நிலையில் காயத்ரியும், அவரது கணவர் கார்த்திக் சங்கரும் வேலைக்கு செல்வதை நிறுத்தினர். கோபி அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் கே.ஜி. பிரைட் லைவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஈமு கோழிப் பண்ணை நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஈமு கோழிப்பண்ணைகளை அமைத்து கொடுத்துள்ளனர். இதற்கு ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் வசூலித்துள்ளனர். இதற்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் ஊக்க தொகை வழங்கப்பட்டது. இதனால் கே.ஜி. நிறுவனத்தில் முதலீடு செய்ய அதிகளவில் மக்கள் குவிந்தனர்.
இந்த வகையில் மொத்தம் 436 பேர்களிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி நிதியை வசூலித்தனர். மாதந்தோறும் முதலீட்டாளர்களுக்கு தகுந்த முறையில் பணம் கொடுத்து வந்த கே.ஜி. நிறுவனம், கடந்த 5 மாதங்களாக ஊக்க தொகை வழங்குவதை நிறுத்தியது. மேலும் கடந்த 4 மாதங்களுக்கு முன் கே.ஜி. நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் சங்கரும், அவரது மனைவி காயத்ரியும் திடீரென தலைமறைவாகினர்.
இது குறித்து கே.ஜி. நிறுவனத்தில் முதலீடு செய்த பவானி சின்னபுலியூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து பல புகார்கள் வந்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக் சங்கரையும், காயத்ரியும் தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் இருவரும் கேளரா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோழிக்கோடு விரைந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் இருந்த நிறுவன ஊழியர் சபீன் கண்ணா என்பவரையும் கைது செய்தனர்.
சேலத்தில் மோசடி:
அதேபோல சேலத்தில் ஈமு கோழி பண்ணை அமைத்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட மற்றொரு தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் தங்கத்துரை(38). இவரது மனைவி பேபி(35). இருவரும் சேர்ந்து பேபி ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள், பேபி ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தனர்.
தமிழகத்தில் இந்நிறுவனத்தின் 46 கிளைகளை துவங்கி, பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் டெபாசிட் வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் ரூ.35 கோடி நிதி வசூலிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டது போல ஊக்கத் தொகை வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஏஜெண்டுகள், மோசடியில் ஈடுபட்ட தங்கத்துரையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மோசடியில் தங்கத்துரைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பேபி, கிருஷ்ணகிரியில் வைத்து கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர்.
இதில் இருவரும் சேர்ந்து சுமார் ரூ.28 கோடிக்கு நிதி மோசடி செய்துள்ளதாக ஒப்பு கொண்டனர். மேலும் பேபியிடம் இருந்த ரூ.1.5 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.