குர்ஷித்தின் அறக்கட்டளை அலுவலகங்களில் உ.பி. போலீஸ் அதிரடி சோதனை
லக்னோ: கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை மோசடியாக நிதி பெற்றது என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். இதையே டிவி டுடேயும் பதிவு செய்து ஒளிபரப்பியது. ஆனாலும் சல்மான் குர்ஷித் தமது அறக்கட்டளை மீதான மோசடி புகார்களை மறுத்து வந்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையும் இது தொடர்பாக நேற்று விசாரணை நடத்தியது. இந்நிலையில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் பொருளாதார குற்றங்களுக்கான பிரிவு இன்று அதிரடியாக சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. உத்தரப்பிரதேசத்தின் 17 மாவட்டங்களில் 4 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. கான்பூர் பகுதியில் 3 குழுக்களும் மீரட் பகுதியில் ஒரு குழுவும் இந்த சோதனையை நடத்துவதாக உ.பி. காவல்துறை அதிகாரி சுப்ரதா திரிபாதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித், இந்த சோதனைகளுக்குப் பிறகு உண்மை தெரியவரும் என்றார். இதேபோல் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவும் வலியுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications