'வெட்டிய' அண்ணா ஆர்ச்சை அடுத்து 'ஒட்டப்' போகிறார்கள்!
சென்னை: வெட்டப்பட்ட சென்னை அண்ணா வளைவை மீண்டும் சரி செய்யும் பணிகள் தொடங்கவுள்ளன.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ மற்றும் நெல்சன் மாணிக்கம் ரோடுகளை இணைத்து ரூ. 117 கோடியில் புதிய மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியின் அடையாளமாக நெடுங்காலம் திகழ்ந்து வந்த அண்ணா வளைவை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வளைவு இது. இந்த வளைவின் இரு பக்கங்களையும் அறுத்து ராட்சத கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 450 டன் எடையை தாங்கும் ராட்சத கிரேன் மூலம் வளைவு தாங்கி நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த வளைவை அறுக்க முடியவில்லை. காரணம் அது மிக மிக வலுவாக இருந்ததால்.
இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசின் திட்டமிடாத செயலுக்காகக் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா நேரில் போய் வளைவை ஆய்வு செய்தார். பின்னர் வளைவை அறுப்பதை நிறுத்த அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 45 நாட்களாக வளைவைத் தாங்கி பிடித்து கொண்டிருந்த கிரேனை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இதற்காக அண்ணா வளைவை தாங்கி பிடிக்க இரும்பு கிரில்கள் ஏராளமாக அடுக்கப்பட்டன. இந்த பணிகள் முடிந்ததும் நேற்று கிரேனை அகற்றும் பணி தொடங்கியது. நள்ளிரவில் கிரேன் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், அறுக்கப்பட்ட அண்ணா வளைவை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ஒட்ட வைக்கும் பணி இன்று தொடங்கியது. வளைவின் இரு பக்கங்களிலும் மற்றும் தூண்களிலும் துளைகள் போட்டு இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. 2 வாரத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் இரு வளைவுகளுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications