அன்புச் சகோதரியாகிய எனக்கு மேலும் வெற்றிகளை அள்ளித் தர மக்கள் காத்திருக்கிறார்கள்: ஜெயலலிதா

அதிமுக ஆண்டுவிழாவையொட்டி கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!
நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 ஆண்டுகள் நிறைவடைந்து, 41வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ள வேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; இயன்றபொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில் எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச் செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி திமுகவிற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை தந்தது.
அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.
புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17ம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.
திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும் ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும் தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.
தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும், வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.
கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக, உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ்நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல.
இது நெருப்பாறு. இது வஞ்சகமும், சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது. இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.












Click it and Unblock the Notifications