கத்காரி ஒரு ஊழல் பேர்வழி; மோடியையே பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி
கத்காரிக்கு எதிரான ஊழல் புகார்களை வெளியிடப் போவதாக அர்விந்த் கெஜ்ரிவால் இன்று ‘நாள் குறித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி, அர்விந்த் கெஜ்ரிவால் சொல்லப் போகும் புகார்கள் சரி என்று மட்டும் சொல்லவில்லை.. கத்காரியின் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கூட என்னிடம் இருக்கிறது சொல்லி அதிரடியைக் கிளப்பியிருக்கிறார். இந்தக் கொலவெறியோடு கத்காரி மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருக்குமேயானால் உடனே அவர் பதவி விலகியாக வேண்டும் என்று ருத்ர தாண்டவமாடியிருக்கிறார் ஜெத்மலானி.
மோடியைத்தான் பிரதமராக்கனும்
இந்த களேபரத்துக்கு மத்தியில் கத்காரிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியிருக்கும் ராம்ஜெத்மலானி இன்னொரு போர்க்கொடியையும் கட்சிக்குள் உயர்த்தியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதியன்று பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லி புறநகர் பகுதியான சூரஜ்கண்ட்டில் நடைபெற்ற போது கத்காரிக்கு ஒரு கடிதத்தை ராம்ஜெத்மலானி அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத்தான் முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் ஜெத்மலானி.
அதோடு மட்டுமல்லாமல் கறுப்புப் பணம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் சில பாஜக தலைவர்கள் இதெல்லாம் ஒரு மேட்டரா என்ற அளவில் பேசுவதையும் ஜெத்மலானி அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்னு சொல்ற மாதிரி ஊழல் புகார் சொல்லறவங்க எல்லாம் நல்லவங்களா என்ன?