டெங்கு காய்ச்சல்: நெல்லை அரசு மருத்துவமனையில் குவியும் வெளி மாவட்ட மக்கள்
நெல்லை: டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்காக வருவது கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுபாட்டில் உள்ள நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சராசரியாக தினமும் 5 பேர் வரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந் நிலையில் நேற்று காலை கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை மற்றும் தூத்துக்குடி, சாத்தான்குளம், விருதுநகர், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 5 பேர் டெங்கு அறிகுறியுடன் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நெல்லை மாவட்டத்தில் டெங்கு தீவிரமாக இருந்த போது நெல்லை அரசு மருத்துவமனையில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று திரும்பினர்.
அப்போது அங்கு குழந்தைகளுக்கென 3 தனி வார்டுகளும், பெரியவர்களுக்கு 2 சிறப்பு வார்டுகளும் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதால், தற்போது தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெற துவங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications