கோவையில் இளம்பெண் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 2 பேர் பலி-ஒருவர் 'சீரியஸ்'
கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மோதி 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி இளம்பெண் லேசான காயமடைந்த நிலையில் தப்பியோடிவிட்டார்.
கோவை மாவட்டம் ரிலையன்ஸ் கார்டனை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா ஸ்ரீ(24). இவர் நேற்று தனது காரில் ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்றார். கார் வசந்தா மில் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட அப்பகுதியில் மக்கள் இங்குங்மாக உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினர்.
வேகமாக வந்த கார், அவ்வழியாக சைக்கிளில் சென்ற கோவை விளாங்குறிச்சி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ராஜகோபால்(58) என்பவர் மீது மோதியது. அதன்பிறகு சாலையில் நடந்து சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன், ராஜன் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இறுதியாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
இதில் கார் மோதிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். மேலும் தாறுமாறாக ஓடிய காரை ஓட்டிய ரம்யாஸ்ரீ லேசாக காயத்துடன் உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்த 4 பேரையும், அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே ராஜகோபாலும், ராஜசேகரனும் உயிரிழந்தனர். ராஜனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்யா ஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ரம்யா ஸ்ரீ தப்பியோடிவிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ரம்யா ஸ்ரீயின் உறவினர்களும் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications