டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறு தேர்வு: 42% பேர் புறக்கணிப்பு.. ஏன், ஏன், ஏன்?
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 மறுதேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் அரசுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 42 சதவீதம் பேர் இந்தத் தேர்வை எழுத வரவில்லை. இதனால் பாதிக்கும் மேற்பட்ட மையங்கள் வெறிச்சோடிப் போய்க் காணப்பட்டன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்பதி வாளர், உதவி வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3687 காலி இடங்களுக்கு குரூப்-2 தேர்வை அறிவித்தது. இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி தேர்வு நடத்தப்பட்டது.
மறுதேர்வு அறிவிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு 4-ந்தேதி நடத்தப்பட்டது.
தீவிர கண்காணிப்பு
அதன்படி தமிழகம் முழுவதும் 114 மையங்களில் 3456 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்திருந்தது.
ஈரோட்டில் உள்ள பிரச்சினைக்குரிய மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் கண்காணிக்கப்பட்டனர். மேலும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
சென்னையில் வெறிச்சோடிய மையங்கள்
சென்னையில் பெரும்பாலான தேர்வு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 20 பேர் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட அறைகளில் 7 முதல் 10 பேர் மட்டுமே வந்திருந்து தேர்வு எழுதினர்.
சென்னை முழுவதுமே அனைத்து தேர்வு மையங்களிலும் இதே நிலையே காணப்பட்டது. 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் ஏராளமானோர் மறுதேர்வை புறக்கணித்துள்ளனர்.
வேலூரில் 35 சதவிகிதம்
சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
காலியான தேர்வு மையங்கள்
ஒருசில மாவட்டங்களில் மட்டுமே தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை தாண்டியது. குறிப்பாக ஊட்டி மையத்தில்தான் தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவிலானோர் தேர்வு எழுதினர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் தேர்வு மையங்கள் காலியாகவே கிடந்தன.
இந்த ரிசல்டாவது வருமா?
தேர்வை புறக்கணித்தவர்கள் ஒருபுறம் இருக்கையில் தேர்வெழுதிய மாணவர்களே நம்பிக்கை இழந்து பேசியதை காண முடிந்தது. ஆகஸ்ட் மாதம் நன்றாக படித்து குரூப் 2 தேர்வினை நன்றாக எழுதியதாக கூறிய பட்டதாரிகள் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் வேதனை அடைந்தாக கூறினர். இருப்பினும் மறுதேர்வுக்கு நன்றாக படித்து எழுதியிருக்கிறோம். இந்த தேர்வு முடிவாவது விரைவில் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினர் அவர்கள்.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் அரசு வேலை குறித்த தங்களின் கனவு நனவாகாமல் போய்விடுமோ என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் சராசரியாக 42 சதவீதம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசுக்கும் கூட அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
45 நாட்களில் ரிசல்ட்
இதனிடையே நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறு தேர்வு முடிவுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார். குரூப் 2 தேர்வுக்கான விடைகள் இன்னும் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், விரைவில் கணினி வழித் தேர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications