ராம் ஜேத்மலானியை கட்காரிக்கு எதிராக திருப்பிவிட்ட மோடி: ஆர்.எஸ்.எஸ். எம்.ஜி. வைத்யா

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பாஜக தலைவர் நிதின் கட்காரியை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளபோதிலும் அவருக்கு பக்கபலமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனையாளர் எம்.ஜி. வைத்யா தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
நிதின் கட்காரிக்கு எதிரான பிரச்சனைகள் குஜராத்தில் இருந்து தான் துவங்கியுள்ளன. கட்காரி பதவி விலக வேண்டும் என்று விரும்பும் ராம் ஜேத்மலானி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எல்.கே. அத்வானி மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் தங்களுக்கு பிரதமர் ஆக விருப்பமில்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டனர்.
ஆனால் மோடிக்கு பிரதமர் ஆகும் ஆசை உள்ளது. கட்காரி பாஜக தலைவராக இருந்தால் தான் பிரதமராகுவதற்கு இடையூறாக இருக்கும் என்று மோடி நினைத்திருக்கலாம். அதனால் தனது திட்டத்தை நிறைவேற்ற ஜேத்மலானியை பயன்படுத்துகிறார்.
கட்காரிக்கு எதிரான தனது அதிருப்தியை ஜேத்மலானி இப்படி வெளிப்படையாக கூறியிருக்கக் கூடாது. கட்காரி பதவி விலக வேண்டும் என்று எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அதை கட்சியிடம் தெரிவிக்க வேண்டும். பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய இது சரியான நேரமல்ல். லோக்சபாவில் பாஜகவுக்கு ஏராளமான எம்.பி.க்கள் உள்ளனர். அதனால் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்து கட்சி முடிவெடுக்கும்.
யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா மற்றும் ஜஷ்வந்த் சிங் ஆகியோரும் ராம் ஜேத்மலானி போன்றே நினைத்தால் அவர்கள் மூவரும் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்றார்.
மோடி குறித்த கருத்து வைத்யாவின் தனிப்பட்ட கருத்தாகும். அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்த கருத்தன்று என்று அதன் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
வைத்யா சொல்வதில் உண்மையில்லை- கட்காரி:
ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எம்.ஜி.வைத்யா பாஜகவைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் கூறியுள்ளதில் உண்மையில்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராம் ஜேத்மலானியை மோடி பயன்படுத்துகிறார் என்பது பொய். கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுகின்றனர் என்றார்.
இது தவிர வைத்யாவின் பிளாக்கில் அவர் தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று பாஜகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications