4 மாதத்திற்கு பின் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாத ஆய்வுக்கு பிறகு இன்று பூமிக்கு திரும்பினார்.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(47). நாசா விஞ்ஞானியான அவர் முதன்முறையாக கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி விண்வெளிக்கு சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணியாற்றிய அவர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி பூமி திரும்பினார்.

2வது முறையாக விண்வெளிக்கு சென்ற சுனிதா
சுனிதா கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி, ரஷ்யாவின் யூரி மாலென்சென்கோ மற்றும் ஜப்பானின் அகி ஹோஷிடே ஆகியோருடன் கஜகஸ்தானில் இருந்து விண்வெளிக்கு சென்றார். இது சுனிதாவின் 2வது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் இருந்து கொண்டே அதிபர் தேர்தலில் வாக்களிப்பு
கடந்த 6ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா விண்வெளியில் இருந்தே வாக்களித்தார்.

விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றினார் சுனிதா. இந்நிலையில் பூமிக்கு திரும்பும் முன்பு தலைமை பொறுப்பை அங்குள்ள நாசா விஞ்ஞானி கெவின் போர்டிடம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தார்.

4 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பல்
சுனிதா மற்றும் அவருடன் சென்ற 2 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 127 நாட்கள் தங்கிய பிறகு இன்று காலை பூமியை வந்தடைந்தனர். அமெரிக்காவின் விண்கலமான ஷட்டில் கலன்கள் இப்போது உபயோகத்தில் இல்லை என்பதால், ரஷ்யாவின் Soyuz கலன் மூலம் இவர்கள் இன்று பூமிக்குத் திரும்பினர். கஜாகிஸ்தான் நாட்டில் இவர்கள் தரையிறங்கினர்.

புதிய மூவர் குழு..
இவர்கள் பூமிக்குத் திரும்பிவிட்ட நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த ஓலெக் நோவிட்ஸ்கை, யெவ்ஜெனி தரேல்கின், அமெரிக்காவின் கெவின் போர்ட் ஆகிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த மாதம் 25ம் தேதி இந்த விண்வெளி மையத்தை அடைந்த பின்னர் தான் சுனிதா தலைமையிலான குழு பூமிக்குத் திரும்ப ஆயத்தானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications