இந்திரா, ராஜீவ் காந்தி கொலையாளிகள், கசாபுக்கு வாதாடியவர் தானே ஜேத்மலானி: திக்விஜய் சிங்
டெல்லி: தீவிரவாதிகளுக்காக, கொலைகாரர்களுக்காக வாதாடியவர் தான் பாஜக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்
நிதின் கட்காரியை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி வலியுறுத்தினார்.
அண்மையில் அவர் கூறுகையில்,
ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என்றார்.
இந்நிலையில் ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் யாருக்காகவெல்லாம் வாதாடியுள்ளார் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் பட்டியல் போட்டுள்ளார்.
அவரது டுவீட்:
ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம், இந்திரா காந்தி கொலையாளிகள், ராஜீவ் காந்தி கொலையாளிகள், அப்சல் குரு, பாபா ராம்தேவ் ஆகியோருக்காக வாதாடியுள்ளார் ராம் ஜேத்மலானி. அமித் ஷா, ஹர்ஷத் மேத்தா, கேதன் பாரக், காஷ்மீர் போராளிகள், நரேந்திர மோடி, எதியூரப்பா. பாஜக எம்.பி.யின் சி.வி. அபாரம்.
ராம் ஜேத்மலானி யார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராமர் குறித்த அவரது கருத்து கண்டனத்திற்குரியது. அவர் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலையாளிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். மேலும் கசாப், அப்சல் குருவுக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். அப்படிபட்டவரிடம் இருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications