அன்னிய முதலீடு விவகாரம்: கருணாநிதியை சமாதானப்படுத்த வருகிறார் கபில்சிபல்

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கிவருகின்றன. தற்போது வாக்கெடுப்பில்லா விவாதத்துக்கு தயார் என்று அறிவித்து இறங்கி வந்திருக்கும் மத்திய அரசு அனேகமாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் எனும் அக்னி பரீட்சைக்கு தயாராவதாகவே கூறப்படுகிறது.
இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளையும் வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளையும் சமாதானப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரத்தில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச நவம்பர் 25ம் தேதியன்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் சென்னை வர உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அண்மையில்தான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசிய நிலையில் மீண்டும் மத்திய அமைச்சர் ஒருவரை காங்கிரஸ் மேலிடம் தூதுவிட இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி தந்த அறிக்கையில் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் கைவண்ணமும் இருப்பது சிஏஜி அலுவலக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் மூலமாக வெளியே வந்துள்ளது. இதனால் இந்த 2ஜி விவகாரம் அப்படியே பாஜக பக்கமாகத் திரும்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் மிக பலத்த அடி வாங்கியது திமுக தான் என்பதும் இப்போது இதை பாஜக பக்கமாக திருப்பிவிடும் முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் கருணாநிதியை கபில் சிபல் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications