இனி நான் எடுக்கப் போவது புதிய அவதாரம்... காட்டப் போவது புதிய ஆட்டம்: ராமதாஸ்
சனிக்கிழமை இரவு விழுப்புரத்தில் பாமக சார்பில் ஒரு பொதுக்கூட்ட்ம் நடைபெற்றது. அதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக சாடிப் பேசினார். ஜாதி வெறியைத் தூண்டியவர் கருணாநிதிதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ராமதாஸின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
தமிழக அரசியலில் இனி புது அரசியல், புது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தை 46 ஆண்டுகளாக ஆண்டு, சீரழித்து, சின்னா பின்னமாக்கி விட்டனர். இருளில் ஆழ்த்திய இரு திராவிட கட்சிகளையும், ஒழித்துவிட்டு அந்த இடத்தில் நாம் உட்கார வேண்டும். இதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். நம்மைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாது.
இரண்டு திராவிடக் கட்சிகளும், இந்த 46 ஆண்டுகளில் தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றியிருக்க வேண்டும். வறுமை போயிருக்க வேண்டும். 3 வேளையும், மக்கள் சாப்பிட்டிருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிளஸ்2-வுக்கு மேல் படித்திருக்க வேண்டும். இளைஞர்கள் தமிழில் புலமையும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். விவசாயம் செழித்திருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன..? மதுக்கடைகளுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும் போகச் சொல்லி இளைஞர்களை மதி மயங்க வைத்துள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு 45 சதவிதம் ஓட்டுக்கள்தான் உள்ளது. மீதமுள்ள 55 சதவித ஓட்டுக்கள் நடுநிலையாளர்கள் ஓட்டு. இவர்கள் அ.தி.மு.க. தி.மு.க.வுக்கு எதிரானவர்கள். இவர்களின் ஓட்டு பா.ம.க.வுக்குதான் கிடைக்கும். இந்த இரு கட்சிகளின் ஆட்டத்தை அடக்க பா.ம.க. புது அவதாரம் எடுத்துள்ளது.
1987ல் நான் வன்னியர் சங்கம் தொடங்கும் போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். நான் அப்போதே கருணாநிதியைத்தான் எதிரி எனக் கூறினேன். அரசியலில் வன்னியரை ஓரங்கட்டியுள்ளார். தர்மபுரி கலவரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கருணாநிதி என் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார்.
கருணாநிதி, தமிழரா அல்லது திராவிடரா என்பதை முதலில் கூற வேண்டும். கர்நாடகாவிலும் திராவிடர் உள்ளனர். அங்குச் சென்று பேசி காவிரியில் தண்ணீரைக் கொண்டுவர முயற்சி செய்யட்டும். அவர் அங்கே போய் திராவிடத் தலைவன் எனக் கூறிக் கொள்ள வேண்டியதுதானே.
தமிழுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? கருணாநிதி தமிழகத்தை அழித்ததற்கு ஆதாரம் உள்ளது. அவர் என்னுடன் பேச முடியுமா? இது திராவிடம் இல்லை! தீராத விஷம்! ஜாதி மதம் இல்லாத சமுதாயம் படைப்போம் என்றார். ஆனால், ஜாதி வெறியைத் தூண்டி! அதற்கான அவசியம் இப்போது இல்லை.
நாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் 110 தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என்று பேசினார் ராமதாஸ்.
இரு திராவிடக் கட்சிகளையும் இப்படிக்கடுமையாக தாக்கும் டாக்டர் ராமதாஸ், இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துத்தான் இத்தனை காலமாக அரசியல் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.