சிபிஐ இயக்குனர் நியமனத்தில் அருண் ஜேட்லியின் 'உள்குத்து': போட்டு உடைக்கும் ஜெத்மலானி!
சிபிஐ இயக்குனர் நியமனத்தில் பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி ஏன் தலையிடுகிறார் என்று விவரித்து பாஜக தலைவர் கத்காரிக்கு ராம்ஜெத்மலானி மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாஜகவில் நிதின் கத்காரிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதால் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ராம்ஜெத்மலானி. அவரை கட்சியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்க நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்த ஜெத்மலானி தாம் கூறியபடியே மீண்டும் கத்காரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ராம்ஜெத்மலானி அனுப்பியிருக்கும் 2-வது கடிதத்தில் சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் அருண்ஜேட்லி ஏன் தலையிடுகிறார் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய அரசு ரஞ்சித் சின்ஹாவை சிபிஐ இயக்குனராக நியமித்திருக்கிறது. இதற்கு டெல்லி போலீஸ் கமிஷனராக இருக்கும் நீரஜ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார். நீரஜ்குமார் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அருண் ஜேட்லியின் ஜூனியர்கள். இதனாலேயெ இந்த விவகாரத்தில் அவர் தலையிடுகிறார் என்று போட்டுடைத்திருக்கிறார் ஜெத்மலானி.
இதேபோல் லோக்பால் மசோதா தொடர்பாக அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் தம்மிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று சுஷ்மாவுக்கு எதிராகவும் ஒரு புகாரை அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் ராம்ஜெத்மலானி.
ஆனால் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
இதனிடையே ராம் ஜெத்மலானியை கட்சியை விட்டு நீக்குவது குறித்து பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.
வாக்குகள் பறிபோகும்
இந் நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் ஜெத்மலானி, நிதின் கத்காரியின் நடவடிக்கையால் பாஜக தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. என் மீது நடவடிக்கை மேற்கொண்டால் பாஜக பல லட்சம் வாக்குகளை பறிகொடுக்க நேரிடும் என்றார்.












Click it and Unblock the Notifications