பி.ஆர்.பழனிச்சாமி மீது 34வது வழக்கு பதிவு: நிலமோசடி செய்ததாக புகார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த நாகு என்பவர் கீழவளவு போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், மேலூர் அருகேயுள்ள இ.மலம்பட்டியில் உள்ள தனது மாமியாருக்குச் சொந்தமான நிலத்தை பி.ஆர்.பிழனிச்சாமி, முருகேசன் உள்ளிட்ட 11 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்து கொண்டனர். நிலத்தில் இருந்து 2 கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனர் என கூறியுள்ளார்.
இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கீழவளவு போலீசார் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமி மீது இதுவரை 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துரை தயாநிதி முன் ஜாமீன் ஒத்திவைப்பு
கிரானைட் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனர் மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மேலூர் நீதிமன்றம் பிடி வாரண்டு பிறப்பித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் துரை தயாநிதி தரப்பில் முன்ஜாமீன் கேட்டும் பிடி வாரண்டை ரத்து செய்யக் கோரியும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வம் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதனிடையே தலைமறைவாக உள்ள துரை தயாநிதியை கைது செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவருகின்றனர்.