கட்சியில் அவரும், மனைவியும்தான் இருக்கிறார்கள். சிலநேரம் மனைவிகூட இருப்பதில்லை- கருணாநிதி நக்கல்!
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற என்விஎன் சோமுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இன்றெல்லாம், காளான் போல கட்சிகள், கட்சி தலைவர்கள் முளைத்துவிடுகிறார்கள். சிலரது கட்சியில் அவரும், அவரது மனைவியும்தான் இருக்கிறார்கள். சிலநேரம் மனைவிகூட இருப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பதுபோன்று கூறிக்கொள்வார்கள்.இன்று திமுக சார்பில் சொல்லப்படும் கருத்து, இருட்டிலே ஒளி தெரிவதைபோலத்தான் வெளியே தெரிகின்றன. அதிமுக ஆட்சியில் விளக்கு எரிவதைப்போல திமுக ஒளிபரவுகிறது.
செம்மொழி என்றால் யாருக்காவது தெரியுமா?. 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்வராக இருந்தபோது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று, டெல்லி சென்று அங்குள்ளவர்களை எல்லாம் சந்தித்து விளக்கம்கூறி, தமிழுக்கு அந்த தகுதி உண்டு என்று எடுத்துக்கூறினேன். மத்திய அமைச்சர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வந்து, விழாவிலே கலந்துகொண்டனர். ஆனால், செம்மொழி வார்த்தை சிலருக்கு செந்தேளாக கொட்டுகிறது. அதனால்தான் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
செம்மொழியை அவமதித்தவர்களை அப்புறப்படுத்த சிங்கக் குட்டிகளாய் இளைஞர்கள் எழும் காலம் வரும். அதைத்தான் என்.வி.நடராஜன் போன்றவர்கள் விரும்பினார்கள், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சிக்காலத்தில் திமுகவின் கருத்துக்கள் செயல்பாடுகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எனினும் இருட்டிலே பிறக்கும் ஒளி போல திமுகவின் கருத்துக்கள் வெளி வரும்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை அதிமுக ஆட்சியோ அல்லது ஜெயலலிதா ஆட்சியோ என்று அழைக்க முடியாது, அதற்கு பதிலாக இருண்ட ஆட்சி என்று தான் அழைக்க வேண்டும். பலமணிநேர மின்வெட்டுதான் இதற்கு சாட்சி என்றார் கருணாநிதி.