அரசியல் தலைவர்களை கிலி கொள்ள வைக்கும் ஹெலிகாப்டர்’, விமான சம்பவங்கள்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சித்திரதுர்கா மாவட்டத்தில் பயணம் செய்தபோது ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட விமானி சாதுர்யமாக ஹெலிகாப்டரை இறக்கிவிட பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் பயணம் என்றாலே தலைவர்களை கிலி கொள்ள வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் சிக்கிய, தப்பிய தலைவர்களைப் பற்றிய ஒரு பார்வை...

விமான விபத்துகளில் பலியானவர்கள்..
நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 1940களில் இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக சென்ற நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் பலியானார். அதன் பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் விமான விபத்தில் சிக்கினார். அவர் இறந்தாரா? உயிர் பிழைத்தாரா? என்ற சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது. 1973-ல் காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் பலியானார். 1980ல் இந்திரா காந்தி மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 1994-ம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த சுரேந்திர நாத் குடும்பத்தோடு விமான விபத்தில் உயிரிழந்தார். 2001-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மாதராவ்சிந்தியா விமான விபத்தில் உயிரிழக்க நேரிட்டது.

விமான விபத்தில் தப்பியவர்கள்
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1977ல் அசாமில் விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். அவருடன் பின்னாளில் அருணாச்சல பிரதேச முதல்வராக் இருந்த பிகே துங்குனும் உயிர் தப்பினார். 2004-ம் ஆண்டு குஜராத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல், பிரித்விராஜ் செளகான், குமாரி செல்ஜா ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை தலைவராக இருந்த பாலயோகி, ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹரியானா அமைச்சராக இருந்த பிரபல தொழிலதிபர் ஓ.பி. ஜிண்டால், விவசாயத் துறை அமைச்சர் சுரேந்திரா சிங், அருணாசலப் பிரதேச கல்வி அமைச்சர் நதுங், அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த தலைவர்கள். 2004-ம் ஆண்டு மேகாலாய அமைச்சராக இருந்த சங்மா, 3 எம்.எல்.ஏக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பியவர்கள்
பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவர்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது வறண்ட புல்வெளியில் ஹெலிகாப்டர் தரை இறங்கிய உடனே தீ பிடித்துக் கொள்ள சாதுரியமாக வேறு ஒரு இடத்தில் ஹெலிகாப்டரை விமானி இறக்கியிருந்தார். 2001ல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பயணித்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியது. ஆனால் கெலாட் உயிர் தப்பினார். பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் சென்ற விமானம் பெரோஸ்பூரில் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி அவசரமாக தரை இறக்கப்பட்டதால் உயிர் தப்ப முடிந்தது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங், அமைச்சர் பிரதாப் சிங் ஆகியோர் 2006-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தப்பியவர்கள்.












Click it and Unblock the Notifications