ஸ்ரீராமர் கோயிலை இடித்த பாகிஸ்தான் அரசின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை: பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீராமர் கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசின் வாலை ஒட்ட நறுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலை நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் இடித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாகிஸ்தான் என்ற பகுதி இஸ்லாமிய வன்முறைக்குப் பணிந்து பாரதத்தின் அன்றைய தலைவர்கள் பிரித்துக் கொடுத்தது. அதன் விளைவாக அங்குள்ள இந்துக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் நாமும் பொறுப்பாகிறோம் என்பதைப் பாரத அரசாங்கம் உணர வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் கட்டாயமாக மதமாற்றப்படுவதும், இந்துப் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதும், கடத்தப்பட்டு முஸ்லீம்களாக மதமாற்றப்படுவதும் தன்மானமுள்ள எந்த மனிதனையும் நெஞ்சுருகச் செய்துவிடும்.
பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்துக்கள் ஜனத்தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்துக்களின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன, வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்துக்களாக வாழ்வதற்கு அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் (வரி)பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அரசாங்கம் ரௌடித்தனமான அரசாங்கம், அங்கு சட்டம் ஒழுங்கிற்கோ, நீதிக்கோ வழியில்லாத காட்டுமிராண்டித் தனமான செயல்பாடே அதன் வெளிப்பாடாக உள்ளது.
இது வெளிநாட்டுப் பிரச்சனை என்று மத்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது. பாகிஸ்தானை வெளிநாடாக உருவாக்கியதே நாம் தான். அன்றிலிருந்தே பாரதத்திற்கும், அங்குள்ள இந்துக்களுக்கும் தொடர்ந்து தலைவலியைக் கொடுப்பதே பாகிஸ்தான் அரசாங்கத்தின் தலையாயப் பணியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் இத்தகைய கொடூரச் செயல்களை ஐக்கிய நாடுகளின் சபைக்கும், மற்ற உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று பாகிஸ்தானின் வாலாட்டத்தை ஒடுக்க பாரத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்குள்ள இந்துக்கள் தன்மானத்தோடு வாழ வழிகாண வேண்டியது நமது அரசாங்கத்தின் கடமை. கராச்சியில் இடிக்கப்பட்ட ஸ்ரீ ராமர் கோயிலை கட்டித்தரவும், அங்கு வாழும் மக்கள் பாதுகாப்பாக வாழவும் பாகிஸ்தான் அரசை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க வைத்து அங்குள்ள இந்துக்களுக்குப் பாதுகாப்பும், சுயமரியாதையும் ஏற்படுத்தித் தர வேண்டியது நமது பொறுப்பு என்பதைப் பாரதத்தில் வாழும் அனைவரும் உணர்ந்து செயல்பட இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications