'டம்மி' குண்டுகளுடன் போலீஸ்காரர்களை அனுப்பி தீவிரவாத வேட்டை 'ரிஹர்சல்' பார்த்த போலீஸ்!
சென்னை: இன்று அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பையும் போலீஸார் மேற்கொண்டனர். சென்னையில் 12 போலீஸாரிடம் டம்மி வெடிகுண்டுகளைக் கொடுத்தனுப்பி தீவிரவாதிகள் வேட்டைக்கான ஒத்திகையையும் போலீஸார் நடத்தினர்.
நேற்று இரவு 8 மணியளவில் அனைத்து போலீஸாருக்கும் ஒரு தகவல் போனது. அதாவது 12 போலீஸாரிடம் டம்மி வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளோம். அவர்களை ரோந்து போலீஸார் கண்டுபிடித்து பிடிக்க வேண்டும். கோட்டை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் கூறியது.
இதையடுத்து இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீஸார் உஷாராகினர். டம்மி வெடிகுண்டுடன் வரும் போலீஸார் கருப்புச் சட்டையில் இருப்பார்கள் என்ற க்ளூ மட்டுமே ரோந்து போலீஸாருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இதை வைத்துக் கொண்டு ரோந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கருப்புச் சட்டையுடன் நடந்தோ, வாகனத்திலோ யார் வந்தாலும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். நகர் முழுவதும் போலீஸார் நேற்று இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்து விட்டு டம்மி வெடிகுண்டுகளுடன் சுற்றிய போலீஸாரைப் பிடிப்பதில்தான் மும்முரமாக இருந்தனர். பெரும் கண்ணாமூச்சிக்குப் பின்னர் காலையில் விடிவதற்குள் 12 பேரையும் பிடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சென்னை போலீஸார்.
இருப்பினும் தீவிரவாதிகள் உண்மையிலேயே ஊடுறுவினால் எப்படி திறமையாக அவர்களைக் கண்டுபிடிப்பது என்ற பயிற்சிக்காகவே இந்த தீவிரவாதி வேட்டை ரிஹர்சல் நடத்தப்பட்டதாக காவலதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.