குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல்- பிரச்சாரம் ஓய்ந்தது!

குஜராத் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 87 தொகுதிகளில் வரும் 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு 17-ந் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் களைகட்டியது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
சோனியா சாடல்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் பிரச்சாரம் செய்துவிட்டுப் போன நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். வடகுஜராத்தின் பதான் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா, குஜராத்துக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கியிருக்கிறது. ஆனால் அந்த நிதியில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது. குஜராத் மாநில அரசு மக்கள் விரோத அரசாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சாடினார்.
53 இடங்களில் 3டி மூலம் மோடி பிரச்சாரம்
முதல்வர் நரேந்திர மோடியோ நேற்று ஒரே நாளில் 53 இடங்களில் 3டி தொழில்நுட்பம் மூலமாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில், குஜராத் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்று தெரியாமலே "'தேர்தல் சுற்றுலா"வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வந்து போகின்றனர். இந்த மாநில மக்களுக்கு யார் நன்மை செய்யக் கூடியவர்கள் என்பது நன்றாகவே தெரியும். இதனால் வரலாற்று சிறப்புமிக்க தோல்வியைத் தழுவ இருக்கிறது காங்கிரஸ்.
பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இங்கு வந்து இந்த மாநில மக்களைக் காயப்படுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். நாட்டின் பிரதமருக்குக் கூட வாக்கு வங்கி அரசியலுக்கு மேலே எதுவும் தெரியவில்லை என்பது சோகம்தான்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கோ இந்த நாட்டின் வரலாறே தெரியாது. குஜராத்தின் வரலாறும் தெரியாது புவியியலும் தெரியாது. குஜராத்தில் 57 தாலுகாக்கள் மின்சாரம் இல்லாதவை என்று சொல்லியிருக்கிறார். அந்த 57 தாலுகாக்களிலுமே மின்சாரம் கொடுக்கப்பட்டுவிட்டது என்பது அவருக்கு தெரியாது.
பிரதமர் மன்மோகன்சிங்கோ, மத்திய அரசால்தான் குஜராத் வளர்ச்சியடைந்தது என்கிறார். சோனியாவோ குஜராத் மாநிலமே வளர்ச்சியடையவில்லை என்கிறார்.. இதென்ன முரண்பாடு? என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்றும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டின. மாலை 5 மணியுடன் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிளில் பிரச்சாரம் ஓய்ந்தது.












Click it and Unblock the Notifications