மாயா கட்சியினர் அமளி: ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
வேலைவாய்ப்பில் தலித் மக்களுக்கு முன்னுரிமை கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தார்.
தொடர்ந்து வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்த வாரம் முழுவதும் ராஜ்யசபாவில் அமளியாக உள்ளதால் அவை முடங்கியுள்ளது.
மேலும் இன்று காலை அவை கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் மசோதா குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை முதலில் 12 மணி வரையிலும், பின்னர் 12.30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. மறுபடியும் அவை கூடியவுடன் பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர் அமளியில் ஈபடுட்டதால் சபாநாயகர் ஹமீது அன்சாரி அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.
வேலைவாய்ப்பில் தலித் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதாவை 3 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற மாயாவதி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.