பயங்கர வேகத்தில் வந்த கார் மோதி 16 செம்மறி ஆடுகள், 2 பேர் பரிதாப மரணம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே படு வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் போய்க் கொண்டிருந்த செம்மறி ஆட்டுக்கூட்டம் மீது பாய்ந்தது. அதில் 16 செம்மறி ஆடுகள் பலியாகின. அதேபோல அந்த ஆடுகளுடன் வந்து கொண்டிருந்த இரண்டு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான 44 ஆடுகளை மேய்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் புத்தாம்பல் பகுதியைச் சேர்ந்த ரவிமுருகன் (37), பேராவூரணி அருகேயுள்ள பூச்சிதெருவைச் சேர்ந்த பழனிவேல் (28) ஆகியோர் சனிக்கிழமை இரவு மாங்காட்டில் இருந்து ஓட்டிச் சென்றனர்.
ஆணவயல் அருகே போய்க் கொண்டிருந்தபோது ஆலங்குடியிலிருந்து படு வேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் கார் ஆட்டு மந்தை மீது பயங்கர வேகத்தில் மோதியது. மேலும் நிற்காமலும் போய் விட்டது. இதில், ரவிமுருகன், பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.16 ஆடுகளும் உடல் சிதறி உயிரிழந்தன. அந்த இடமே ரத்தக்காடாகவும், சிதறிய சதைகளுமாக பயங்கரமாக காணப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.