தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள்! - சீமான் ஆவேசம்

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செந்தமிழன் சீமான் பேசியதாவது:
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிவிட்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் அந்த முடிவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரித்தது, அக்கட்சித் தலைவர் கருணாநிதி நடத்திய கபட நாடகம்.
அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இங்கு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுப்பது தொட்டிலை ஆட்டுவதற்கு பிள்ளையை கிள்ளிவிடுவது போன்ற மோசடி அரசியலாகும் என்று கூறினார்.
"சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதில் தமிழக அரசு உள்ளபடியே உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்குமானால், சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டடம் கட்ட அனுமதிப்பது ஏன்? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறிவிட்டு, சங்கரன் கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே அணு உலை செயல்படுவதற்கான ஆதரவு தந்ததுபோல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இப்போது எதிர்க்கும் தமிழக முதல்வர், தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆதரிப்பாரா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் எதுவும் தமிழ்நாட்டில் கால் பதிக்க விடமாட்டோம். அவற்றை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தும்போது தமிழக அரசு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து, அதனுடைய நேர்மையை தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவதுதான் மிகப் பெரிய அரசியல் கபட நாடகமாகும். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லாமலா இருந்தது. அப்போதும் மின்வெட்டு, இப்போதும் மின்வெட்டு. திராவிட அரசுகளின் ஆட்சியில் தமிழ் நாடு இருட்டில் தள்ளப்பட்டுள்ளது.
காவிரி நதியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு கிடைக்காததால், தஞ்சை தரணியில் வரப்பளவிற்கு வளர்ந்துவிட்ட நெற்பயிர்கள் காய்ந்துபோகும் நிலை ஏற்பட்டு, பல இலட்சக்கணக்கான விவசாய பெருமக்களின் வாழ்க்கை கேள்விக்குரியதாகியுள்ளது. காவிரி நதியில் நமக்குரிய பங்கை கர்நாடக அரசு தர மறுக்குமானால், நெய்வேலியில் இருந்து போகும் மின்சாரத்தை நிறுத்துவோம் என்று தமிழக முதல்வர் எச்சரிக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்த மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும், காவல் துறையும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்று கேட்கவில்லை.
தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள்...
டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. ஆனால் தமிழீழத்தில் நமது பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பல்லாயிரக்கணக்கில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டத்தை இந்திய நாட்டின் ஒரு ஊடகம் கூட கண்டிக்கவில்லையே ஏன்?
தமிழன் அடிப்பட்டால் அதனை தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை. ஆனால் தமிழன் திருப்பி அடித்தால் அதனை பயங்கரவாதம் என்று சர்வதேசம் கூறுகிறது, இது நியாயம்தானா?
தமிழ் இனமும், தமிழ்நாடும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு தீர்வு காண எந்த அரசும் வரவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நம் பிரச்சனைகளை கையெடுக்க மறுக்கும் அரசுகளை நாம் கைபற்ற வேண்டும். அது மட்டுமே தமிழினம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும்," என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கலைக்கோட்டுதயம், கா. அய்யநாதன், அன்புத் தென்னரசன், வெற்றிக்குமரன், அமுதா நம்பி, மருத்துவர் இளவஞ்சி, குமுதவல்லி, பெரியார் அன்பன், காஞ்சி எழிலரசன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications