பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தான் ப.சிதம்பரம், ஆனால்... நாராயணசாமி இழுப்பு!
ப.சிதம்பரத்திற்குப் பிரதமர் பதவி கிடைக்கப் போவதாக சமீப காலமாகப் பேச்சு அடிபட்டு வருகிறது. அதிலும் சென்னையில் நடந்த அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவின்போது கமல்ஹாசன் இதை நேரடியாக பேசி விவாதத்தைத் தொடங்கி வைத்து விட்டார். தொடர்ந்து பேசிய திமுக தலைவர் கருணாநிதியும், ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று பேச விஷயம் சூடாகி விட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த நாராயணசாமி,
நமது நாட்டில் பிரதமர் ஆகும் தகுதி பலருக்கு உள்ளது. ப.சிதம்பரமும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான். காங்கிரஸ் கட்சியில் அன்னை சோனியாகாந்தி கைகாட்டுபவரே பிரதமர் ஆக முடியும். காங்கிரஸ்கார்ரகளைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் எங்களது வருங்காலத் தலைவர்.
ப.சிதம்பரம் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவாரா என்று யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். இருப்பினும் சோனியாகாந்தி யாரை நிறுத்தினாலும் அவருக்கு புதுவை காங்கிரசார் பணி செய்வார்கள். அதற்கு நானும் கட்டுப்படுவேன் என்றார் அவர்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை, மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மத்திய அரசு எந்த மாநிலம் மீதும் அடக்குமுறையை கையாளவில்லை. மாநில பட்ஜெட்டிலில் 60சதவீதத்துக்கும் மேலான தொகையை மத்திய அரசு தருகிறது. காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்று பாகுபாடு பார்க்காமல் நிதியுதவி செய்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் உத்திரபிரதேசத்துக்கு ரூ.3,500கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்துக்குத்தான் ரூ.3ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.