டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்
இஸ்லாமாபாத்: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்டு இறந்ததை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள சில பெண்கள் அமைப்பினர் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் ஓடும் பேந்தில் 6 பேரால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவத்தைக் கண்டித்து பாகிஸ்தானில் உள்ள சில பெண்கள் அமைப்பு இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் மாலை மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தின.
இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பெண்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். நாங்கள் இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல உலக பெண்களுக்கும் ஆதரவாக உள்ளோம், பாகிஸ்தான்/இந்திய/பாலஸ்தீனிய/காஷ்மீர் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
மேலும் கற்பழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் சிலர் பெண்களை சீரழிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க வேண்டு்ம் என்றனர்.
பெண்கள் என்ன ஆடை அணிந்தாலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று ராக்ஷி என்ற என்.ஜி.ஓ.வைச் சேர்ந்த ருக்ஷிந்தா பர்வீன் தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டெல்லி மாணவிக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.