நாடார்கள் பற்றிய சர்ச்சைக்குரிய செய்தி: பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த சர்ச்சைப் பகுதிகள் நீக்கப்படும்.
சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவானது. பாடப்புத்தகத்தில் உள்ள தவறான, சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினர்.
பாடப்புத்தகத்தில் உள்ள தவறான தகவல்களை நீக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நாடார் அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நாடார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி பல்லம் ராஜுவை நேரடியாக சந்தித்தும் முறையிட்டனர்.
சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகளை நீக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் அடுத்த ஆண்டுமுதல் அந்த பாடப்பகுதிகள் நீக்கப்படும் என்று அறிவித்தது. இது தொடர்பாக சி.பி.எஸ்.சி.இ. பாடத்திட்டத்தை உருவாக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்புக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, நாடார் சமுதாயம் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. அறிவித்தது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல், நாடார்கள், கள் இறக்கும் தொழிலை செய்து வந்தவர்கள், திருவாங்கூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் என்ற பகுதிகள் நீக்கப்படும் என மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாடத்திற்கு பொருத்தமில்லாத காரணத்தினால் அவற்றை நீக்க என்.சி.இ.ஆர்.டி. முடிவுசெய்துள்ளது என்றும் மற்றபடி, நாடார் சமுதாயம் தொடர்பான இதர பாடப்பிரிவுகள் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications