5,000 ஊழியர்கள் பணி நீக்கமா?: மறுக்கிறது இன்போசிஸ்

பணி செயல்திறன் குறைவாக உள்ள 5,000 ஊழியர்களை இன்போசிஸ் பணி நீக்கம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாயின. பணியில் திருப்தியில்லாததாலும், தங்கள் பணிகளை சரிவரச் செய்யாத காரணத்தாலும் அந்த ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனம் நீக்கப் போவதாக இன்று காலை பரபரப்பு செய்திகள் வெளியாயின.
ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று இன்போசிஸ் மறுத்துள்ளது.
முன்னதாக சரியாக பணியாற்றாத ஊழியர்களை performance enhancement programme என்ற பெயரில் 6 மாத நோட்டீஸ் கொடுத்து பணி நீக்கம் செய்யும் திட்டத்தை இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், இந்தத் திட்டம் இப்போது கைவிடப்பட்டுவிட்டதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தம் காரணமாக, பல நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் தொழில்நுட்பத் திட்டங்களுக்கான செலவைக் குறைக்க உள்ளதால், இன்போசிஸ் உள்ளிட்ட பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களின் வருவாயும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களை இன்போசிஸ் நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின.
ஆனால், இதை இன்போசிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் நீண்டகாலமாக சரியாக செயல்படாத பணியாளர்களை நீக்குவது வழக்கமானது தான் என்றும், ஆனால், இது 5,000 பேர் என்ற அளவுக்கு எல்லாம் இருக்காது என்று இன்போசிஸ் கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தில் இப்போது 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications