'கறுப்புப் பொங்கலாக' கடைபிடிப்போம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுடனும் மற்றும் அண்டை மாநிலங்களோடும் சுமூகமான நட்புறவின் மூலம் விவசாயிகளுக்கும், தொழில் புரிவோருக்கும் உரிய நேரத்தில் உதவிகளை பெற்றுத்தரவேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால், காவிரி தண்ணீர் பெற்றுத்தராத காரணத்தினால் தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்முனை மின்சாரம் எங்கே?
இந்த ஆண்டு சம்பா மற்றும் குறுவை சாகுபடியில் பயிர்கள் கருகிய நிலையில் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் துயர் துடைக்க இந்த அரசு முன் வரவில்லை. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்குவேன் என்ற வாக்குறுதியையும் இன்று வரை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
கறுப்பு பொங்கல்
இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாகவும், வரலாறு காணாத மின்வெட்டால் பல லட்சம் குடும்பங்கள் வேலை இழந்து வாடுவதாலும், தினந்தோறும் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதாலும், ஜாதிக் கலவரங்கள் தலை விரித்து ஆடுவதாலும் இந்த பொங்கல் விழாவை தே.மு.தி.க. கறுப்பு பொங்கலாக கொண்டாடுகிறது. அதே வேளையில் தே.மு.தி.க.வினால் ஆண்டு தோறும் மக்களுக்கு வழங்கும் உதவிகள் எந்த விதத்திலும் தடைபடா வண்ணம் வருகிற 11ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் ஏழை விவசாய குடும்பங்களுக்கு பொங்கல் உதவியாக பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி, ஏலக்காய், திராட்சை, நெய் ஆகியவைகளும், கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகளும் வழங்கப்படும்.அதேபோல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 10 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications